கேரள மாநிலத்தில் இருந்து தானம் பெறப்பட்ட இதயம் விமானம் மூலம் தமிழகத்தில் (சென்னை) சிகிச்சை பெற்றவருக்கு பொருத்தப்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம், காயங்குளத்தைச் சேர்ந்தவர் பிரணவ் (19). கல்லூரி மாணவரான இவர் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். இந்த நிலையில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் திங்கள்கிழமை இரவு உறுதி செய்தனர். மூளைச்சாவு அடைந்த அவரது இதயம், நுரையீரலை தானமளிக்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இதயம், நுரையீரல் தானமளிக்க தீர்மானிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, உறுப்புகள் தானம் பெறப்பட்டன. மருத்துவமனை அமைந்துள்ள கொச்சியில் இருந்து நெடும்பசேரியில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் இருதயம், நுரையீரல் கொண்டு செல்லப்பட்டது. 34 கி.மீ. தொலைவை 25 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் கடந்தது. அங்கிருந்து, விமானம் மூலம் உறுப்புகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர், குறிப்பிட்ட மருத்துவமனைக்கு 10 நிமிடங்களில் உறுப்புகள் வந்தடைந்தன. அங்கு இதயம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கு இதயம், நுரையீரல் இரண்டும் பொருத்தப்பட்டன. கேரளத்தில் இருந்து உடல் உறுப்புகள் தானம் பெற்று, தமிழகத்தில் பொருத்தப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.